வேடிக்கையான உலகம்

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு குறுங்செய்தி என்னை ஒரு சில மணித்துணிகள் யோசிக்க வைத்தது.

``கடன் இல்லாமல் நடந்து செல்பவர்களை விட
கடன் வாங்கி காரில் செல்பவர்களுக்கு மதிப்பு அதிகம்’’.

மறுக்க முடியாத உண்மை, வாசிப்பவர்களை நிச்சயம் யோசிக்கும் வைக்கும் வைர வரிகள். ஆம் இன்றைய நிலையை மிக அழகாக எடுத்துரைக்கின்றன இவ்விரு வரிகளும்.

இதுபோன்று கடன் வாங்கி காரில் செல்பவர்களுக்கு வெளியில் ஒருவித மதிப்பு இருக்கவே செய்கிறது, ஆனால் இது ஒரு போலியான மதிப்பு.  இதற்காகவே இன்று பெரும்பாலனவர்கள் கடன் வாங்கியாவது கார் வாங்குகின்றனர்; முழுபணத்தையும் கொடுத்து கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இப்படி கார் போன்ற வாகனங்களுக்கு மட்டுமில்லாது, அனாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்குவதும் இயல்பாக உள்ளது. கடன் வாங்கக் கூச்சப்பட்ட நிலை மாறி, இவ்வையகத்தில் கடனில்லாத மனிதர்களைக் காண்பதே அரிதாகவுள்ளது. தனி மனிதனது கடன் மட்டுமின்றி, கார்ப்பரேட், மத்திய/மாநில அரசுகள், தனியார் கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் என்று அனைத்து நிலைகளிலும் கடன் உள்ளது.

கல்விக்கடன், தொழிற்கடன், வீட்டுக்கடன், நகைக்கடன், விவசாயக் கடன், வாகனக் கடன், தவணை முறை என்று கடன் இல்லாத இடமும் இல்லை, கடன் இல்லாத மனிதர்களும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
 
நம்மில் பெரும்பாலனவர்கள் கடன் வாங்குவது தவறு என்று கூறுவதண்டு. கடன் வாங்குவது சரியா, தவறா என்பதை ஆராயுமுன்கடன் அவசியம் தானா என்பதைப் பற்றி விவாதிப்போம்.
 
உதாரணத்திற்கு ரூ 20000-25000 மாதச் சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். அக்குடும்பத் தலைவன்  வாழ்வில் ஒரு கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் கடனில்லாமல் அவனால் வாங்க முடியுமா? நிச்சயமாக முடியும், ஆனால் வாங்குவதற்கு ஆகும் நாட்கள் தான் பிரச்சனை. அதாவது மாதம் ரூ 10000ஐ வீதம் சேமித்தால் மட்டுமே 36 மாதங்களுக்குப் பின் அவனால் அக்காரை வாங்க முடியும். (கார் அவசியமா அல்லது அநாவசியமா என்பது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது)
 
அதேபோல் தான் சொந்த வீடு வாங்குவதும், 25 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க குறைந்தது 250 மாதங்களாவது ஆகும். ஆனால் 20 வருடங்களுக்குப் பிறகு அவ்வீட்டின் மதிப்பு 25 லட்சமாக இருக்காது.

அதே நிலைதான் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கும்; கல்விக்கடன் வாங்காமல் அதுபோன்ற படிப்புகளை முடிப்பது மிகவும் சிரமம். இன்றைய நிலையில் தொழிற்கடன் வாங்காமல் சாதாரணமானவர்கள் எந்த ஒரு தொழிலையும் துவங்க இயலாது.

எனவே கடன் இல்லாமல் இதுபோன்ற  வேலைகள் நிச்சயம் நடக்காது. இதுபோன்ற அவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது என் பார்வையில் தவறாகத் தோன்றவில்லை. ஆனால் அநாவசியத் தேவைகளுக்காகப் பிறரிடம் கடன் வாங்குவது மிகவும் தவறானது.

அன்றைய நாட்களில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு வாசகம் `கடன் அன்பை முறிக்கும்`. இவ்வரிகள் முற்றிலும் உண்மை என்பதற்கு இதோ என் அனுபவம்….

சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடம் அவசரமாகப் பணம் வேண்டும் என்று கேட்டார். நானும் காரணம் எதுவும் கேட்காமல் அவர் கேட்ட தொகையைக் கடனாகக் கொடுதேன்; வாங்கிய தொகையைப்  பின்னொரு நாளில் திருப்பிக் கொடுப்பார் என்றெண்ணி நான் அவருக்கு அளிக்கவில்லை. இன்றுடன் ஐந்தாறு வருடங்களுக்கு மேலாகிறது, இதுவரை அவரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கடனைத் திருப்பிக் கொடுக்காதது கூட எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை, ஆனால் இன்று வரை அவர் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் எரிச்சலாக உள்ளது. என்ன நண்பர் இவர்?

அன்று தான் உணர்ந்தேன், முடியாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்வதில் தவறில்லை, ஆனால் அநியாயச் செலவுகளுக்குக் கடன் கேட்பவர்களுக்கும், கடன் வாங்கியதை மறக்கும் மனிதர்களுக்கும் நிச்சயம் கடனளிக்கக் கூடாது என்று!

கடன் அன்பை முறிக்கும், நட்பைக் கெடுக்கும்.

``கடன்பட்டான் நெஞ்சம்  போல
கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்`` என்ற கம்பரின் வரியை இங்கு நினைவு கூறுதல் மிகவும் அவசியமாகிறது.

கடன்பட்டவனது நெஞ்சம் எப்படிப் பதறுமோ, அதுபோல ராவணின் உள்ளம் பதறியது.  ஆனால் இன்று கடன் வாங்கியவர்களின்  மனம் கலங்கி நிற்பதாகத் தோன்றவில்லை, மாறாக கடனளித்தவர்களின் நெஞ்சமே அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே நாட்களும் கடந்து செல்கிறது. இன்னும் சில விஷமிகள் கடன் வாங்குவதையே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடன் மாட்டிக்கொண்டால் நம் பாடு திண்டாட்டம்தான்.

``ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்`` என்பது ஒளவையின் வாக்கு, அதாவது பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர் என்பது இதற்குப் பொருள் தரும். கடனுதவி கேட்டு நிற்பவருக்கு நாம் இல்லையென்று சொன்னால் நாம் சேர்த்து வைத்த பொருளைக் கயவர் கொண்டு செல்வர் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஒளவை இங்கு குறிப்பிடுவது தானம் செய்யாமலும் பிறருக்கு உதவி செய்யாமல் பொருள் சேர்ப்பவரைக் குறிப்பிடுகிறார்.

``அஃகமும் காசும் சிக்கெனத் தேடு`` - சிக்கனமாயிருந்து தானியத்தையும் செல்வத்தையும் தேட வேண்டும்.

ஒளவையின் இவ்வாக்குத் தான் நம் அனைவருக்கும் இன்று தேவை.

கடன் வாங்குவதற்கும் சிக்கனமாய் இருப்பதற்கும் ஏதாவது தொடர்புண்டா? நிச்சயம் உண்டு.

``வரவு எட்டணா செலவு பத்தணா` என்ற பழைய பாடலில் வருவது போல செலவு அதிகரிப்பதால் கடன் வாங்குவது தோன்றுகிறதா? சிக்கலான கேள்வி தான்.

சிக்கனம், சேமிப்பு, அநாவசிய செலவைத் தவிர்த்தல் என்பதையெல்லாம் யாரும் இங்கு யோசிப்பதாகத் தெரியவில்லை. விருப்பப்பட்ட பொருளை பிறரிடம் கடன் வாங்கியாவது வாங்கியே தீர வேண்டும் என்ற தவறான நிலையில் இச்சமூகம் சென்று கொண்டிருக்கிறது.  

சமீபத்தில் மெட்ரோ என்ற ஒரு படம் பார்த்தேன், அதில் காதலனொருவன் காதலிக்கு ஆப்பிள் ஃபோன் வாங்கித்தரப் பணம் இல்லாத காரணத்தினால்  ரோட்டில் செல்லும் வேறொரு பெண்ணின் செயினைத் திருடுவான். இது ஒரு கற்பனைச் சம்பவம் அல்ல, இது போன்ற கொடுமைகள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன.

முடிந்த வரை சிக்கனமாய் இருந்து, அநாவசியச் செலவுகளைக் குறைத்து, திட்டமிட்டுச் சேமித்தால் மட்டுமே கடன் வாங்குவது குறையும்.

2 comments:

  1. அருமையான அலசல் நண்பரே கடன் வாங்குமுன் இதற்கான செலவு அவசியமா ? என்பதை சிறிது ஆராய்ந்தால் வாழ்வில் வீண் பிரச்சினகள் குறைக்க வழிகள் உண்டு.

    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
  2. கில்லர்ஜியின் முதல் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றிகள்!

    அநாவசியச் செலவுகளை அவசியச் செலவுகளாக எண்ணுவதால் வந்த வினை தான் இந்தக் கடன். நீங்கள் கூறியது போல முதலில் இச்செலவு அவசியமா என்று ஆராய வேண்டும்.

    ReplyDelete