சிலேடை-2

காட்டு வழியில் சென்றுகொண்டிருந்த இரு தமிழ்ப்புலவர்களின் உரையாடல் இதோ –
 
நடந்து சென்று கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு. அவர் மற்ற புலவரிடம்,"ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது, என் செய்ய?" என்று கேட்டார். அதற்கு அடுத்தவர்,

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்"

என்று பதிலுரைத்தார்.

இங்கே பத்துரதன் என்றது தசரதன் (பத்து = தசம்)
தசரதனின் புத்திரன் என்றது இராமன் (புத்திரன் = மகன்)
இராமனின் மித்திரன் என்றது சுக்ரீவன் (மித்திரன் = நண்பன்)
சுக்ரீவனின் சத்துரு என்றது வாலி (சத்துரு = எதிரி)
வாலியின் பத்தினி என்றது தாரை (பத்தினி = மனைவி)
தாரையின் கால் என்றது தாரை என்ற சொல்லில் உள்ள கால் (ா)

மேற்கூறிய வாசகத்தின் பொருள்,
தசரதனின் மகனான இராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை என்றாகும்.

மேற்கூறிய வாசகத்தின் உட்பொருள், முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பதே.

சிலேடை-1 ஐப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.



3 comments:

  1. எளிமையான வார்த்தைகளில் இலக்கிய இன்பம் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. ஐயாவின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  3. தமிழ்திரு.ஆகாயன்May 29, 2021

    மிக நன்று..
    மிக்க நன்றி��.

    ReplyDelete