இதுவும் கடந்து செல்லும்


ஆம், நாம் பேசுவதை நிறுத்தி இன்றுடன் மூன்று நாட்களாகிறது. மனதிலிருப்பதை உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீ அன்று அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை, அதனால் உண்டான ஏமாற்றத்தை விட வலியே அதிகம். 

அன்று நடந்தது உனக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. கடந்து சென்ற இந்த நாட்களில் ஓரிரண்டு வருடங்கள் உருண்டோடிச் சென்றதாக உணர்கிறேன். எனது பலவீனத்தைத் தெரிந்திருந்தும் அதை நீ சொல்லியது மன்னிக்க முடியாததாகத் தோன்றுகிறது. இதை கடந்து செல்ல நினைக்கும் போதெல்லாம் பலவீனத்தை உணர்கிறேன். தவறான ஒன்று சரியாக வாய்ப்பேயில்லை என்பது மட்டும் உறுதியாகத் தோன்றுகிறது. 

உன்னுள் எழுந்த பாதிப்பை என்னால் முற்றிலும் உணர முடியவில்லை, உன்னை புரிந்துகொள்ள முற்படும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்வது வருத்தமாக உள்ளது. ஆனால் என்னைப் பற்றி நீ நிச்சயம் புரிந்து வைத்திருப்பாய் என்று எண்ணியிருந்தேன். உனது மௌனத்தைப் பழக்கப்படாத எனக்கு, நெருப்பில் நிற்பது போல் தோன்றுகிறது. என்னுள் எழும் இதுபோன்ற தருக்கங்கள் உன்னுள்ளும் நிகழ்ந்திருக்குமா ?

ஒருசில நேரங்களில் நம்முள் உருவாகும் கோபமே முடிவை நிர்ணயிக்கிறதுபின்னர் அந்த முடிவை நியாயப்படுத்த முயலும் போதெல்லாம் மனதில் பிடிவாதம் குடிகொள்கிறது. இறுதியில் இதுபோன்ற அவரச முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.

இதுவும் கடந்து செல்லும், காலம் தான் இதற்கான ஒரே மருந்து !




அப்துல் கலாமும் இன்றைய (தமிழ்) இளைஞர்களும் !


ஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’. இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மகான் ஆவது கிடையாது, தகுதியுடைய ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பேறு கிட்டுகிறது. அவர்களிலும் ஒரு சிலரை மட்டுமே இவ்வையகம் நினைவில் வைத்துப் போற்றிக் கொண்டாடுகிறது.

‘கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.’ இன்றைய இளைஞர்களை இவரை விட அதிகமாக நம்பியவர்கள் கிடையாது. இளைஞர் சக்தியின் மூலம் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை கனவாகக் கொண்டிருந்தார். ஆனால் நம் இளைஞர்களின் செயல்களை அவர் இன்று கண்டிருந்தால் நிச்சயம் வேதனையடைந்திருப்பார். சினிமா நடிகர், நடிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களுக்காக தங்களது வாழ்நாளின் நிமிடங்களைச் செலவழிப்பது வெட்கப்பட வேண்டியவொன்று. 



சென்னையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த பேருந்து நாள் கொண்டாட்டமும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையில் நடந்த அரிவாள் சண்டையும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள.

இதுபோன்ற இளைஞர்களுக்கு மத்தியில், ஒரு சிலர் கலாம் அய்யாவை முன்மாதிரியாகக் கொண்டு தம்மால் இயன்ற நற்செயல்களை ஆரவாரமில்லால் சாதித்து வருகின்றனர் . உதாரணத்திற்கு சென்னையைச் சேர்ந்த கலை அரசன் என்ற ஆட்டோ ஓட்டுனர், கலாமின் நினைவு நாளான இன்று பொதுமக்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறார். இதுபோன்ற இளைஞர்களின் செயல்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை நிறுத்தி, வாழ்க்கையை மேம்படுத்த உதவும் கனவுகளைக் கண்டு, அக்கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபவது மட்டுமே அவரை நாம் பின்பற்றுவதற்குச் சான்றாகும்.



 
APJ – WE MISS YOU SIR !

படம்: கூகிள்

செருமுக நோக்கிச் செல்க - புறநானூறு


சங்க கால பெண்களின் நிலை குறித்த பல்வேறு விவாதங்களும், எதிர்மறைக் கருத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும், அப்பெண்கள் வீரத்திலும், அறத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறுக்க இயலாது. சங்க காலப் பெண்பால் புலவர்கள் பலரும் பெண்களின் வீரம், செருக்கு, துணிவு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளைப் பற்றிப் பல்வேறு செய்யுள்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். 
புறநானூற்றுப் பாடலொன்றில் ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்பால் புலவர் ஒருவர், தந்தை மற்றும் கணவனை இழந்து நிற்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தன் நாட்டைக் காப்பதற்காக, அவளது சிறு மகனையும் போருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார்.

புறநானூறு பாடல்  எண் - 279
ஆசிரியர் - ஒக்கூர் மாசாத்தியார்
திணை – வாஞ்சி (புறத்திணை)

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலக்கி, ஆண்டுப்பட்டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க என விடுமே !

கடிது – கடுமையானது;  மூதில்(ன்) – முதுமையான, பழைய; செரு – போர்; மேல்நாள் – முன்னொரு நாள்; பெருநல் – நேற்று; கொழுநன் – கணவன்; நிரை – ஆநிரை (பசுக்கள்); விலக்கி (விலங்குதல்) - குறுக்கிட்ட; செருப்பறை – போர்ப்பறை; வெளிது – வெண்மை; பாறுமயிர் -  உலர்ந்து விரிந்த மயிர்; உடூஇ – உடுத்தி.

பாடலின் பொருள்:
இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு கடுமையானது. இவள் முதுமையான மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான். முன் ஒரு நாளில் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையை எதிர்த்துப் போரிட்டு களத்தில் உயிர் நீத்தான். நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பசுக்களை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் உயிர் துறந்தான்.

இன்று, தெருவில் போர்ப்பறை ஒலி காதில் கேட்டதும் முகம் மலர்ந்து, அறிவு மயங்கி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தனது ஒரே மகனின் கையில் வேல் கொடுத்து, வெண்மையான ஆடையை விரித்து உடுத்தி, அவனது உலர்ந்த தலைமயிர் குடுமியை எண்ணெய் பூசிச் சீவி, போர்க்களம் நோக்கிச் செல்லுமாறு அனுப்பிவைத்தாள்.
 
இவளது துணிவையும் நாட்டுப்பற்றையும் என்னவென்று சொல்வது. 

இதுபோன்று ஈழப்போரில் எண்ணற்ற நம் தமிழ்ப் பெண்கள் தத்தம் உறவுகளை போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து, தாமும் சென்றதனால் அவர்களும் முதுமையான மறக்குலப் பெண்களாகவே இருக்க முடியும்.

படம்: கூகிள்