விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

 
பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம்.

விஷ்ணுபுரம் மிகவும் சவால் நிறைந்த மற்றும் நன்கு கவனித்து வாசிக்கப்பட வேண்டிய நாவல். இதுபோன்ற கதைக்களத்திற்குள் நான் பிரயாணித்துச் சென்றது இதுவே முதல் முறை, இதுவே ஒரு புது அனுபவமாக இருந்தது. இலக்கியத்தைப் பற்றிய புரிதலில்லாத எனைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் சிரமமாகத் தோன்றும். மானுடர்களின் ஞானத் தேடல், வாழ்வியல் பற்றிய தத்துவங்கள், அவற்றைப் பற்றிய தருக்கங்கள், ஐதீகம், சமய சிந்தனை, சமணம், பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேறு வட்டத்திற்குள் நம்மை இழுத்துச் சென்று, அதைப் பற்றிய புரிதலையும் ஆராய்ச்சியையும் வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறது.

கஜபிருஷ்ட மலை, வராகபிருஷ்ட மலை, சோனா நதி, ஹரிதுங்கா மலை பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதுபோன்ற கற்பனை விவரிப்பை இதற்கு முன் எந்தவொரு புத்தகத்திலும் கண்டதில்லை. மானுட உளவியல், சிற்ப சாஸ்திரங்கள், மிருக வைத்தியம், தாந்திரிகம் மற்றும் பழங்குடிகளின் சம்பிரதாயங்களை விளக்கமாக அளித்துள்ளார். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது.  

வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சரியான புரிதலின்றி, பல நேரங்களில் குழப்பமாகவும் வெற்றிடமாகவும் தோன்றியது. முழு புத்தகத்தையும் வாசித்துவிட முடியமா என்ற வினா தொடர்ந்து எழுந்த வண்ணமிருந்தது. குறிப்பாக கெளஸ்துப பகுதியில் வரும் ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில் சிரமம் அதிகமிருந்தது. ஒவ்வொரு பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்பு அவசியம் என்பதைத் தெளிவாக உணர்ந்தேன்.

எனது வாசிப்பில் அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்களை உள்ளடக்கியது, அதில் வந்து செல்லும் சில கதைமாந்தர்களின் பயணம் நம்மில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதிய சொற்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இவை தமிழ்ச் சொற்களா அல்லது சமஸ்கிருதச் சொற்களா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. அதே சமயம் ஆசிரியரின் நுண்ணிய விவரிப்புகளையும், வர்ணனைகளையும் கற்பனை செய்து கொள்வதிலேயே அதிக நேரம் செலவானது. அவற்றின் முழுமையான விவரிப்பை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

வாசிப்பிற்குப் பின் இணையத்தில் உலவும் போது, விஷ்ணுபுர நாவலை படிக்கத் தொடங்குவது எப்படி என்பதை ஜெ.மோ பின்வரும் இணைப்பில் தொகுத்துள்ளார். 


வாசிப்பு அனுபவத்தில் ஒரு பகுதியை மட்டுமே இங்கு தொகுத்துள்ளேன். மீண்டுமொரு முறை இன்னும் சற்று கவனமாக வாசித்து, எண்ணவோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

6174 - க.சுதாகர்

புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும். 

6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.


இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது. 

இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.
லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக  அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.

தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. 

கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது.


"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க 
தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே 
சீரிய கட்டமதில் தடயம் காண்"

ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ;    18/9 = 2
                                        21 -> 2+1 = 3 ; 21/3 = 7

"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே
நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்"

கேப்ரிகர் எண், எ.கா. 1897
1897 -> 9871 (reverse order) - 1789 = 8082
         -> 8820 - 0288 = 8532
         -> 8532 - 2358 = 6174

கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன்.  கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை  நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து. 

வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும். 

ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன். 

தமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக  வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.


பெண்ணொருத்தி....



கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.

தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.

நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது. 

பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிழவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின!

இதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.

பாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.

வழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி
! அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது. 

தாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல
, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது. 

தீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.

ஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது. 

நீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது. 

நீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.   

குளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.

நீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.

நெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை! 

அடிவயிறு குளிராகவும்  அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது. 

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.

மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான  பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !

நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் !

நீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகி பஞ்சணையில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன. 

சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!