நண்பருடன் உரையாடும்போது எங்களுடைய முந்தைய வேலை பற்றிய
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். நாங்களிருவரும் வட இந்தியாவில்
குஜராத் மாநிலத்தில் சில வருடங்கள் பணியாற்றியது, அங்கு
நாங்கள் சந்தித்த நபர்கள், அவர்களது கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை, விருந்தோம்பல்
என்று பல்வேறு தலைப்புகள் பற்றி விவாதித்தோம்.
இவ்வாறாகத் தொடங்கிய உரையாடல், நாங்கள் அங்கு எதிர்கொண்ட பிரச்சனைகள், குறிப்பாக
மொழி சார்ந்த பிரச்சனைகள் பற்றிய திசையில்
திரும்பியது. ஹிந்தி தெரியாததால் நாங்கள் சந்தித்த பிரச்சனைகள், நண்பர்களின் கேலி, யாருடனும்
தோழமையுடன் பழக முடியாத சுழ்நிலை, பிறருடன் பேசுவதிலிருந்த தயக்கம், கடைக்குச்
சென்றால் பொருட்கள் வாங்குவதிலிருந்த சிக்கல் என்றவாறு
சென்றது.
உடனே நண்பர், "ஹிந்தி படிச்சிருந்தா இப்படி
கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை, இதெல்லாம் நம்ம அரசியல்வாதிகள்
செய்த வீண் பிரச்சனை, இவனுக அரசியலுக்கு நம்மதான் பலிகடா. தமிழ்
மொழியைப் பின்பற்றுவதால் எந்த ஒரு நன்மையும் இல்லை, மாறாக ஹிந்தி தெரிந்திருந்தால்
இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சுலபமாகச் சென்றுவர முடியும். ஹிந்தி
தெரியலனா எவ்வளவு கஷ்டம்ன்னு” சொன்னார்.
முதலில் அவர் கூறியதை ஆமோதித்த நான், பின்னர் கூறியவற்றைக் கேட்டு எரிச்சலடைந்தேன். இன்றும் ஞாபகமுள்ளது,
பத்து வருடங்களுக்கு முன் எனக்கும் என் வடஇந்திய நண்பருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம்.
“நீ இந்தியாவில தான இருக்கே, அப்பறம் ஏன் ஹிந்தி தெரியல? தேசிய மொழியே தெரியாம
நீங்கெல்லாம் எதுக்கு இருக்கீங்க? எல்லா மாநிலங்களிலும்
ஹிந்தி கட்டாயம் கற்றுத் தரப்படுகிறது, ஆனா தமிழ்நாட்டில
மட்டும் ஏன் இது கட்டாயமாக்கப் படவில்லை. வேலைக்கு மட்டும் நார்த் இந்தியா
வேண்டும், சென்ட்ரலிருந்து ஃபண்ட் மட்டும் வேணும் ஆனா ஹிந்தி
வேண்டாம்?” என்று கூறினார்.
அதுவரை அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த நான்
உடனே, “ஹிந்தி தெரிஞ்சாதான் இந்தியன்னு யார் சொன்னது?
லாங்வேஜ் தெரிஞ்சா இந்தியனாகிவிட முடியுமா? பாகிஸ்தானி
ஹிந்தி பேசறான், அதனால அவன இந்தியன்னு சொல்லலாமா? ஒருவனுடைய மொழி அறிவை கருத்தில் கொண்டு அவன் இந்தியனா இல்லையான்னு சொல்றது
தப்பு. இந்திய அரசாங்கத்திற்கு நீ எவ்வளவு டேக்ஸ்
(tax) கட்டரையோ அதே டேக்ஸ் நானும் கட்டரேன். எங்களுக்குனு தனி மொழி
இருக்கு, ஆயிரம் இலக்கியங்கள் இருக்கு, அதனால இன்னொரு மொழிய கத்துக்க வேண்டிய தேவையில்லை. தனக்குன்னு ஒரு மொழி
இல்லாதவன் தான் இன்னொரு மொழிய கத்துக்க வேண்டிய கட்டாயமிருக்கு, எங்களுக்கு அந்த அவசியமில்லை” என்றேன்.
இன்றுடன் பத்து வருடங்களாகிறது, அன்று பேசுவதை நிறுத்திய நாங்களிருவரும் இன்று வரை பேசியதில்லை.
சந்தர்ப்பங்கள் பல அமைந்தும் இருவருக்குமிருந்த கசப்புணர்வால் நட்புபாராட்ட
இயலவில்லை. அதற்காக நான் இன்று வரை கவலை பட்டதுமில்லை. இந்தக்
கேள்வி அவர் ஒருவரிடம் மட்டுமில்லாமல் பெரும்பாலான வட இந்திய மக்களிடமும்
உள்ளது. ஏன் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும்
ஹிந்திக்கு எதிர்ப்பு உள்ளது? நாட்டின் தேசிய மொழியைக்
கற்பதென்பது தேச விரோதச் செயலா? பின்னர் ஏன் தமிழர்கள்
ஹிந்தியை எதிர்க்கிறார்கள்? ஆங்கிலேயர் விட்டுச் சென்ற
ஆங்கிலம் நம் அன்னிய மொழியாக இருந்தாலும், அதைக் கற்க
முனையும் தமிழர்கள் தேசிய மொழியை புறக்கணிப்பது எவ்வாறு சரியாகும்? தமிழர்களின் இச்செயல்பாடு தவறானதல்லவா? என்பது போன்ற பேச்சுக்களை தமிழ்நாட்டிற்கு
வெளியே வாழ்ந்து வரும் தமிழர்கள் நிச்சயம் கேட்டிருப்பர்.
இக்கேள்விகளுக்கான தீர்வுகளை ஆராயும் முன், சில வரலாற்று நிகழ்வுகளைப இங்கு பதிவு செய்தல்
அவசியமாகிறது. இன்னொறு முக்கியமான விஷயம், வரலாற்று நிகழ்வுகளை வாசிக்கும் பொழுது அங்கு குறிப்பிடப்படும் செய்திகளை
நிகழ்காலத்தோடு ஒப்பிடாமல், நிகழ்வு நடைபெற்ற
காலகட்டத்திற்குச் சென்று வாசித்தல் தவறான புரிதலைத் தடுத்து நம் புரிதலை
எளிமையாக்கும்.
ஹிந்தி புறக்கணிப்பு அல்லது ஹிந்தி எதிர்ப்பு என்பது இன்றோ
நேற்றோ தொடங்கப்பட்ட்தல்ல. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்
துவங்கிய ஒரு போராட்டம் (1900-1940). ஆம் ஹிந்தியை
இந்தியாவின் ஆட்சிமொழியாக்கும் மத்திய/மாநில அரசின் திணிப்பு/பலவந்தத்தை
எதிர்த்துத் தொடங்கப்பட்டதே இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
இம்மொழித் திணிப்பு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும்
அரசால் கொண்டுவரப்பட்டது.
1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரசின்
இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி
படிப்பதைக் கட்டாயமாக்கியது. இராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்துப்
போராடியவர்களில் மிக முக்கியமானோர் - மறைமலை
அடிகள், ஈ.வே.ரா பெரியார், பாவேந்தர் பாரதிதாசன்,
கி. ஆ. பெ. விசுவநாதம் மற்றும் ஏ. டி. பன்னீர் செல்வம் ஆவர்.
இதைத் தொடர்ந்து ஆறு, ஏழு,
எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப்
பாடமாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தி பயில்வது
மட்டுமல்லாது, இந்தி தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றால்
மட்டுமே அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடியும் என்ற
நிலை உருவானது. இதனால் கிராம மற்றும் நகர்ப்புறத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில்
சிரமம் ஏற்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதேனில்
சாதி, மத பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து
கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து தமிழகம் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு
அடிமையாக்குவதாகக் கருதிய பெரியார் தலைமையிலான கட்சியினரும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் ஒன்றிணைந்து உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்களில்
ஈடுபட்டனர். அதன் விளைவாக அன்றைய காங்கிரஸ் கட்சி பதவி விலகிதையடுத்து, 1940இல்
இருந்த பிரிட்டிஷ் அரசு இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினர்.
இந்தி திணிப்பின் தொடக்கம் காங்கிரஸ் கட்சியை மட்டுமே
சாராது, நாம் தேசத் தந்தையாகப் போற்றும் காந்தியடிகள்
மற்றும் நேருவின் பங்கும் இதில் முக்கியமானது. பிரிட்டிஷ்
ஆட்சியின்போது ஆங்கிலம் அரசுமொழியாக விளங்கி வந்த நிலையில், பிரிட்டிஷுக்கு
எதிராக அனைத்து மாநிலத்தவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரு பொது மொழியை
உருவாக்கும் முனைப்பில் தொடங்கப்பட்டதே இந்த தேசிய மொழி அல்லது பொது மொழித்திட்டம்.
இதன் வழிகாலே இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி என்ற மொழியின்
பிறப்பு. இதனடிப்படையிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்துஸ்தானி மொழியை பிற
மாநிலங்களில் பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டது. ஆனால் முடிவில் வெற்றிபெற
இயலவில்லை.
1948-49 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற
பின்னர் காங்கிரசு தலமையிலான இந்திய அரசு, இந்தியைப்
பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. இதனை எதிர்த்து சென்னை மாகாணம்
மற்றும் இன்னபிற இடங்களிலும் இந்தித் திணிப்பை எதிர்த்து
திராவிடர் கழகத்தின் அறிஞர் அண்ணாவும், நீதிக்கட்சியின்
பெரியாரும் போர்க்கொடி தூக்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்
எதிரொலியாக கட்டாயப் பாடமாக இருந்த இந்தி விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது.
1948-50இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை
இயற்றும்/வகுக்கும் நேரத்தில் ஒருமையான அல்லது
ஒன்றுபட்ட தேசிய மொழி பற்றிய விவாதமும் நடைபெற்றது. இவ்வமைப்பிலிருந்தவர்களில்
பெரும்பாலானோர் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்கள், பொதுமொழி என்பதன்
அடிப்படையில் பல்வேறு மசோதாக்கள்
இந்தி மொழியில் இயற்றப்பட்டது. அமைப்பிலிருந்த சிலர்
"இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்.
இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு
இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினர்.
இதனை எதிர்த்து அமைப்பிலிருந்த
தென்னாட்டவர்கள், இதுபோன்று இந்தி
படிக்கக் கட்டாயப்படுத்தினால், முற்காலத்தில் ஆங்கிலத்தை
வெறுத்த எம்மக்கள் பலரும் ஆங்கிலத்திற்கு ஆதரவாகும் நிலை ஏற்படுமென்பதை
உரைத்தனர். இதவே பின்னாளில் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்தும்
நிலை உருவாகுமென்று எடுத்துரைத்தனர்.
தீவிர-வாதங்களுக்குப் பிறகு, இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டு, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலமும் அடுத்த
பதினைந்து ஆண்டுகளுக்கு அலுவலக மொழியாக நீடிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்
காரணமாகவே ஆங்கிலம் நமது அனைத்து சட்ட நடவடிக்கைகள், நீதிமன்றங்கள்,
சட்டங்கள், மசோதாக்கள், விதிகள்
போன்றவற்றில் நிலைத்தது.
இதன்பின் 1955-58ல் பிரதமராக இருந்த நேரு தலைமையில்
அமைக்கப் பெற்ற ஆணையம், ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக்
கொணரும் வழிகளைக் குறிப்பிட்டது. அதனடிப்படையில் இந்தி
அலுவல் மொழியாகவும் ஆங்கிலம் துணைமொழியாகவும் பரிந்துரைக்கப்பட்டது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த இராஜாஜி அவர்கள் இச்சமயம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக மாநாடு நடத்தினார். அப்போது "இந்தி
ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேபோல் இந்தி
பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே” என முழங்கினார்.
இதுபோன்று பல்வேறு எதிர்ப்புகள் இந்தி திணிப்புக்கெதிராக
வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் நேரு அவர்கள் இந்தி மொழித்திணிப்பை நிறுத்தி, ஆங்கிலம் இணையாக வரலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.
1960-63ல் மீண்டும் அலுவல்மொழிச் சட்ட மசோதாவை
எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும்
மறியலும் வலுவானது. இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கையை முன்னிருத்திய
கட்சிகளில் மிகமுக்கியமானது அண்ணாவால் தொடங்கப்பட்ட 'திராவிட முன்னேற்றக் கழகம்'. அந்நாளில் முனைப்புடன் இந்தித்
திணிப்பை எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
மத்தியில் மொழிச்சட்டத்தின் முக்கிய
கருத்தாக "இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால்
பேசப்படும் மொழி 'இந்தி', ஆதலால் இதுவே
தேசிய மொழியாக வழங்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பதிலுரைத்த
அண்ணா அவர்கள், "எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால்
இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத்தான்
இருக்கும்" என்றார்.
1964ல் நேருவின்
மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானார். சாஸ்திரியும்
அவரது அமைச்சரவையின் அமைச்சர்களான மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும்
இந்தியை ஒரே அரசு மொழியாக்குவதில் தீவிரமாக இருந்தனர்.
அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும் என்றும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டும், பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி திணிக்கப்படும் என்ற அச்சமும் கவலையும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில்
பெருமளவில் பங்கேற்க வழிவகுத்தது.
அன்றைய முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப்
(ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில்
கற்க முன்மொழிந்தார். இதனால் மூன்று மொழிகளைப் படிக்க
வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது. தமிழக
அரசியல் கட்சிகளனைத்தும், இந்தி அலுவல் மொழியாக மாறும்
ஜனவரி 26 நாளை துக்கநாளாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக
தி.மு.க தொண்டர்களும், மாணவர்களும் இணைந்து மாநிலமெங்கும்
கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். "இந்தி ஒழிக", "Hindi Never, English Ever" என்ற கோஷங்கள் முதன்முதலில் எழுப்பப்பட்டது.
இதன்பின் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே
கலவரம் ஏற்பட்டது. கலவரத்தின் தொடர்ச்சியாக
காவல்துறையினர் மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடும்
நடத்தியது, இதனால் நிலைமை மேலும் மோசமாகி
தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிப்பு என பெருகியது. தொடர்வண்டி நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. அன்று நடந்த கலவரத்தில் மாணவர்கள்
பலரும் படுகாயமடைந்ததோடு, கட்சித் தொண்டர்கள் பலரும் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இப்போராட்டத்திற்குப் பிறகு, லால் பகதூர்
சாஸ்திரி நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் குறித்து
அதிர்ச்சி தெரிவித்ததோடு நேருவின் வாக்குறுதிகள்
பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.
1. ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான்
தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடரலாம்.
2. இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில்
இருக்கும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.
3. இந்தி இல்லாத மாநிலங்கள் மைய அரசுடன்
ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தி
இல்லாத மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.
4. மத்திய அரசின் அலுவல்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்
இதன் தொடர்ச்சியாக, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத்
தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, திமுக
முதன்முறையாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றது. தேர்தலில் மாணவர் தலைவர் சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர்
சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார். அந்நாளே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கோலோச்சம் முற்றிலுமாக நின்றது.
காமராஜரின் இத்தோல்விக்கு முக்கியக் காரணம் இந்தி திணிப்பை
ஆதரித்த காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் நோக்கமே.
பின்னர் பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் அவரசச்
சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதோடு, மும்மொழித் திட்டம்
கைவிடப்பட்டு இந்தி முழுமையாகக் கல்வித்திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும்
ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது. அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக்
கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திக்கு அளிக்கப்பட்ட தனிநிலை அந்தஸ்து
முடிவுற்று அனைத்து மொழிகளுக்கும் சமநிலை வழங்கும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
1986ல் பிரதமர் ராஜீவ்
காந்தி தேசிய கல்விக் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்தினார். அப்போது திமுகவின்
தீவிரமான போராட்டத்தின் முடிவில் தொண்டர்கள் பலர் தீயிட்டு தற்கொலை
செய்துகொண்டனர். போராட்டம் தீவிரமாவதைக் கண்ட ராஜீவ் காந்தி அவர்கள் இந்தி கட்டாயமாக்கப்படாது என்று வாக்குறுதியளித்ததால் போராட்டங்கள்
முடிவுக்கு வந்தன.
பிரதமர் மோடியின் துவக்க காலத்தில் இந்தித் திணிப்பு
மீண்டும் உருவாகும் நிலை எழுந்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக
தலைவர் கருணாநிதி, வைகோ போன்ற அரசியல் தலைவர்களின் எதிர்ப்பலையால் இந்தித் திணிப்பு
தடுத்து நிறுத்தப்பட்டது. இன்றும் ஏதோ ஒருமூலையில் இந்த இந்தி
எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் வெறும் வரலாறாக மட்டும்
ஏற்பது தவறானதாகும். என் பார்வையில் சுதந்திரம் என்பது தனிமனிதனின் அல்லது ஒரு
சமூகத்தின் மீது மற்றவரின் திணிப்பு இல்லாமலிருப்பது. அதுவே இங்கு மொழி பற்றிய
திணிப்பிற்கும் பொருந்தும்.
இந்தி கற்றால்தான் இந்தியாவில் வாழ முடியும் என்ற நிலையில்
நாமில்லை, அந்நிலை வரும் நிலையிலுமில்லை. செம்மொழியாம் நம் தமிழ் மொழியின்
சிறப்பிற்கு இணையான இன்னொரு மொழி இருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பற்றி
சிந்திக்கவும் எனக்கு எண்ணமில்லை.
என் தமிழ் ஆசிரியன் பாரதி குறிப்பிட்டது போல்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்”.
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நாம் தமிழன் என்ற
உணர்வு அவசியமிருத்தல் வேண்டும்.
“தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”.
இந்தி என்பது இந்தியாவில் பேசப்படும் ஏனைய மொழிகளுள் ஒன்றே
தவிர வேறேந்த சிறப்பும் இருப்பதாக
அறியப்படவில்லை.
திறன் படைத்த எந்தவொரு சமூகமும் பிறருக்கு அஞ்சி, பிறர்
திணிப்பை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. தாய்நாட்டிற் கெதிராக செயல்படுவது தீவிரவாதமே
தவிர, இந்தி கல்லாமிலிருப்பது எவ்விதத்திலும் தீவிரமாகாது. ஆங்கிலத்தை நண்பனாக
மட்டும் ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர நம் அன்னையாக என்றும் ஏற்கமுடியாது.
திணிக்கப்படுவது புறக்கணிக்கப்படும் என்பது மனித இயல்பு.
தமிழனே நீ வெற்றி நடைபோட்டு தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை
சிறப்புறச் செய்தல் வேண்டும். அதே நேரத்தில் இந்தி கற்க விருப்பமுள்ளவர்கள்
தாராளமாக தாங்கள் விரும்பும் மொழியைக் கற்கலாம். எந்த
மொழியையும் விரும்பிக் கற்பதில் தவறில்லை. கற்றவை யாவும் நற்பலனையே தரும். அது
மொழிக்கும் பொருந்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.
நன்றி: விக்கீபீடியா, கூகிள், கூகிள் இமேஜ்.
ஆஹா, நாம் டமிலை ஷூரா இம்ப்ரூவ் பண்ணுவோம்.
ReplyDeleteடில்லிக்கு பல மீட்டிங்குகளுக்குப் போய் அவன் இந்தியில் பேசுவதைக்கேட்டு திருட்டு முளி முளித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.
ReplyDeleteஇந்தி திணிப்பு என்பதே தவறான் வார்த்தை. நாம் பிர்ச்னையை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தியின் ஆதிக்கம் நம்மை வடநாட்டவருக்கு அடிமைப்படுத்த மட்டுமே உதவும். ஆதலால் இது அடிமைப்படுத்தும் செயல் என்று அறியப்படுவது அவசியமான ஒன்றாகும். நாம் ஆங்கிலம் பேசுவதால் இங்கிலீஷ் காரனுக்கு அடிமையாகிவிடவில்லை. காரணம் அதில் சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தமிழ்மொழியை ஒழுக்கம் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கவில்லை. நாமாக விரும்பி அதைக் கற்கிறோம். அதனால் உலகளாவில் பயனும் அடைகிறோம். மொழியைக் கொண்டு அடிமை படுத்தும் முயற்சிதான் இந்தியை ஆட்சி மொழியாக்குவது. இன்னமும் அது செயல்பட முடியவில்லை என்பதால் வேதம் புராண கதைகள்கொண்டு மத வழியாகவும், இந்துத்துவ சாதி சமுதாய கட்டமைப்பை ஆதரிப்பதன் மூலமாகவும் முயற்சி செய்கிறார்கள். இன்றைய நிலமையில் தமிழ்நாடு பணிய மருப்பதால் இந்தியாவின் கழிவுகள் கொட்டப்படும் சகலவிதத்திலும் புறக்கணிக்கப்பட்ட மாநிலமாக ஆனது. ஆதியில் பண்பாட்டுக்காலம் என்ற ஒரு பகுதி தமிழர்களின் வரலாற்றில் மட்டுமே உண்டு. நம் ஒழுக்கம் பண்பாட்டை திருடி தன் பண்பாட்டாக மாற்றிக்கொண்டார்கள் ஆனாலும் முழுமையாக அதை செய்ய முடியவில்லை. செய்திருந்தால் அவர்கள் அறம் சார்ந்த அழகிய சமுதாயமாக அமைத்து இருப்பார்கள். நாமும் அதைத் தொலைத்து விட்டோம். நாம் பள்ளியில் வரலாறாக படிப்பது வடநாட்டினரின் வரலாறே ஒழிய நம்முடையதல்ல. அதைப்ப்டித்து இருந்தால் இன்று தமிழனின் நிலை சாதியமாக இருந்திருக்காது. யாவரும் கேளிர் என்று சமத்துவமாக ஆகியிருக்கும். வட நாட்டானுக்கு என்றோ நாம் அடிமைப்பட்டு விட்டோம். அவன் தன் மதங்கொண்டு சாதிய வெறியூட்டி நம்மை பிரித்து வைத்து இருக்கிறான்.
ReplyDelete@பழனி.கந்தசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! இப்பதிவின் முதல் பின்னூட்டம் தங்களிடமிருந்து வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் தாங்கள் குறிப்பிட்ட கருத்து எனக்கு சரியாகப் புரியவில்லை என்றே தோன்றுகிறது.
ReplyDeleteஎந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்வது நல்லதுதான் ஆனா திணிப்பை ஏற்றுக்கொள்வது சரியல்ல. இந்தியாவில் நாளை ஒரியா மொழி கட்டாயமாக்கப்படும் அதையும் நாம சந்தோஷமா ஏற்றுக் கொள்ளலாம். இப்படியே அடுத்தவன் சொல்றதக் கேட்டுட்டே இருக்கலாம்.
@ பழனிவேலு, தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!
ReplyDelete“அடிமைப்படுத்தும் செயல் மற்றும் தமிழ்நாடு-புறக்கணிக்கப்பட்ட மாநிலம்” என்று நீங்கள் கூறியுள்ளதை முழுமையாக ஆமோதிக்கிறேன்.
//ஆங்கிலம் பேசுவதால் இங்கிலீஷ் காரனுக்கு அடிமையாகிவிடவில்லை. காரணம் அதில் சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தமிழ்மொழியின் ஒழுக்கம் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கவில்லை. நாமாக விரும்பி அதைக் கற்கிறோம். அதனால் உலகளாவில் பயனும் அடைகிறோம். மொழியைக் கொண்டு அடிமை படுத்தும் முயற்சிதான் இந்தியை ஆட்சி மொழியாக்குவது// மிகச் சரியாக விளக்கியுள்ளீர்கள்.
இங்கு நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் இத்தலைப்பிறகு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுப்பதாக உணர்கிறேன்.
படித்து வைத்தால் தவறில்லை ஆனால் திணிப்பு கூடாது ,ஒரு பதிவே எழுதி உள்ளேன் பார்க்கவும்.
ReplyDelete@அபயா அருணா, தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட பதிவை தற்பொழுதுதான் வாசித்தேன்; மொழி கற்பதில் உங்களுக்குள்ளிருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடாக அந்தப் பதிவு தோன்றுகிறது.
//படித்து வைத்தால் தவறில்லை// என்று நீங்கள் குறிப்பிட்டதை ஆமோதிக்கிறேன். எந்த மொழியையும் விரும்பிக் கற்பதில் தவறில்லை. கற்றவை யாவும் நற்பலனையே தரும்...அது மொழிக்கும் பொருந்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.
உங்கள் பதிவைப் பற்றிய பின்னூட்டத்தை அங்கே அளித்துள்ளேன்.
ஐயா பழனி கந்தசாமி, உங்களுக்கு ஹிந்தி புரியவில்லையென்றால் அவர்களை ஆங்கிலத்தில் பேசுமாறு கட்டாயப்படித்திருக்கலாமே? அவர்களுக்கு அவர்கள் தாய் மொழியில் பேச, படிக்க, தேர்வெழுத, வேலைப்பார்க்க உரிமை இருக்கும்போது நாம் நம் தாய்மொழியில் இதை யெல்லாம் செய்ய உரிமையில்லையா? தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில் போட்டித்தேர்வுகளை அட்டவணையில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளில் நடத்துவது ஒன்றும் கஷ்டம் இல்லையே?
ReplyDeleteஅடுத்தது இவர்கள் சொல்லுவது, இந்தியை பள்ளிகளில் படிக்காததால் இவர்களால் வடக்கில் போய் கடைக்கு போகமுடியவில்லையாம். ஐயா எந்த மொழியையும் அந்த இடங்கலில் போய் மூண்றே மாதங்களில் பேசக்கற்றுக்கொள்ளலாம். நாங்கள் இங்கு வளைகுடா வந்தபோது அரபிக்கை பள்ளிகளில் படித்துக்கொண்டா வந்தோம்? இப்பொழுது பேசவில்லை? லட்ச்சக்கணக்கில் இந்தியர்கள் வலைகுடா வருவதால் அரபிக்கை இந்தியப்பள்ளிகளில் பயிற்றுவிக்கவேண்டும் என்று யாராவது கேட்கிறர்களா?
இந்தி தெரிந்தால்தான் இந்தியணாக இருக்கமுடியும் என்பது தவறு. இந்தி தெரிந்தவன் தான் இந்தியன் என்றால் நாம் யாரு? நாம் அவர்களால் ஆக்ரமிக்கப்பட்டு அடிமைகளாக இருக்கிறோமா? இந்தியா பல மொழிகள், பல மதங்கள், பல இணங்கள் கொண்ட ஒரு அற்புதமான நாடு. They are Hindi speaking Indians, we are Tamil speaking Indians. அதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.
மத்திய அரசு இந்தியை மட்டும் வளர்க்க வேண்டிய அரசு அல்ல. இந்தியை வளர்க்கதான் உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியான போன்ற மாநில அரசுகள் இருக்கின்றனவே? மத்திய அரசு பொதுவான அரசு. அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்கவேண்டும். அதை நாம் வலியுறுத்துவதுதான் உண்மையான இந்தியணாக இருக்க முடியும்.
@Kevin Matthews, தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
ReplyDelete//இந்தி தெரிந்தால்தான் இந்தியனாக இருக்கமுடியும் என்பது தவறு. இந்தியா பல மொழிகள், பல மதங்கள், பல இணங்கள் கொண்ட ஒரு அற்புதமான நாடு. They are Hindi speaking Indians, we are Tamil speaking Indians. அதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.
மத்திய அரசு இந்தியை மட்டும் வளர்க்க வேண்டிய அரசு அல்ல. மத்திய அரசு பொதுவான அரசு. அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்கவேண்டும். அதை நாம் வலியுறுத்துவதுதான் உண்மையான இந்தியனாக இருக்க முடியும்//
தங்கள் கருத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள், இப்பதிவின் நோக்கமும் அதுவே. நீங்கள் குறிப்பிட்டதைப் போல் மொழி கற்க அதிக நாட்கள் தேவைப்படாது, கற்கும் ஆர்வமும் விருப்பமும் இருந்தால் எளிதில் கற்கலாம். விருப்பத்திற்கு மாறாக திணிப்பதென்பதை எந்நாளும் ஏற்க முடியாது. திணிப்பு என்பது அடிமைத்தனத்தின் முதற்படி.
இந்தி தெரியாமல் முதலில் கஷ்டப்பட்டது என்பது உண்மைதான். வட இந்தியாவில் வேலைக்குச் சேர்ந்த புதிதில், என்னிடம் வேலை செய்தவர்கள் பலரும் கெட்ட வார்த்தைளை என்னிடம் உபயோகித்ததை பின்னாளில் கேள்வியுற்ற போது கோபமும் ஆத்திரமும் வந்த்து. அதுவே இந்தி கற்க உறுதுணையாகவுமிருந்தது.
பதிவு பற்றிய உங்கள் தெளிவான கருத்துக்களுக்கும், பதிவின் புரிதலுக்கும் மீண்டும் நன்றி. இவ்வலைப்பூவிலுள்ள ஏனைய பதிவுகளை வாசித்து கருத்தளித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன், நன்றி!
அருமையான பதிவு!
ReplyDeleteதமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் வேலை செய்யப்போகும் எந்த மனிதனும் முதலில் எதிர்நோக்கும் பிரச்சினை இந்த மொழிப்பிரச்சினை தான்! தமிழையும் உடைந்த ஆங்கிலத்தையும் வைத்துக்கொண்டு எதையும் சமாளிக்க முடியாமல் ஹிந்தியை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள நேருகிறது. தேங்கிக்கிடக்கும் நம் அறிவும் விசாலமாகிறது.
திருமணமான புதிதில் மராட்டிய மாநிலத்தில் ஒரு கிராமத்தில் குடித்தனம். சுற்றிலும் பல மாநிலத்தின் மக்கள். மிரண்டு போய் ' ஹிந்தி முஜே நஹி மாலும் ' [ ஹிந்தி எனக்குத் தெரியாது] என்று மட்டும் சொல்லப்பழகினேன். ஒரு நாள் சுற்றியிருந்த எல்லா பெண்களும் என்னை வலுக்கட்டாயமாக முறை வைத்துக்கொண்டு என்னை அவரவர் இல்லம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள்.. பீஹார் மாநிலத்தின் சப்பாத்தி எப்படி செய்வது என்று கற்றேன். உத்திரப்பிரதேசத்து மீன் கறியை ரசித்தேன். மராட்டிய மொழியில் வயது முதிர்ந்தவர்களிடம் பேசப்பழகினேன். கேரளத்தின் இசை பிடித்துப்போனது. ஒவ்வொரு மாநிலத்தின் பழக்க வழக்கங்களும் சமையலும் உதவி செய்யும் மனப்பான்மையும் பேச்சு வழக்கும் மிகவும் பிரமிப்பைத் தரத்தர, இந்தியா எத்தனைப் பெரிய, எத்தனை எத்தனை கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடு என்று புரிந்தது!
வளைகுடாவில் வாழ வந்து நாற்பது வருடங்கள் கழிந்து விட்டன. இங்கும் பலப்பல மாற்றங்கள். என் மகன் படித்த போது அரேபிய மொழி கட்டாயப்பாடமல்ல. தமிழ் மக்களே தென்படாத அன்றைய காலத்தில் ஹிந்தி மொழியில் தான் அரேபியர்கள் பேசினார்கள். இன்றைக்கு என் பேரனுக்கு அரேபிய மொழி கட்டாயப்பாடமாக உள்ளது. அவர் நூறு சதவிகிதம் மதிப்பெண் வாங்கி என் மருமகளுக்கு சொல்லித்தருகிறார்!
இப்படி வாழ்வியல் காரணங்களுக்காக பல நாடுகள், பல மொழிகள் என்று வாழ்க்கை மாறிப்போனாலும் நேசமும் சுவாசமுமாக இருப்பது நம் தமிழ் மட்டும் தானே!
@ மனோ சாமிநாதன் - அனுபவமே ஒருவனுக்கு ஆசான் என்பதையும், விருப்பத்துடன் கற்றால் எதுவும் சாத்தியம் என்பதையும் தங்கள் அனுபவத்தின் வழியாக மிகச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள். அதே நேரத்தில் சுற்றத்தோடு நம்மை இணைத்தலின் அவசியத்தை வாழ்வியல் அனுபவத்துடன் விளக்கியுள்ளீர்கள்.
Delete~நேசமும் சுவாசமும் அன்னைத் தமிழே~ அருமை!
எளிதில் விளங்கும் கருத்தாழமுள்ள பின்னூட்டம் அளித்தமைக்கு எனது வணக்கமும் நன்றியும்!
தங்களின் இப்பின்னூட்டம் ஒரு பதிவைப் போல் உள்ளது.
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி, தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா!
Delete