Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

தொற்று

முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. 

‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்!

இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவும் எண்ணவில்லை.  ஒருவேளை இதுதான் பிறவிப் பயன் என்பதா!


வாலிபத்தின் காரணமாக விளைந்த சிந்தனை தடுமாற்றத்தின் வினைதான் இத்தொற்று. இருவருக்கும் இடையேயிருந்த இறுக்கத்தின் காரணமாக மனதில் மறைந்திருந்த இச்சை இரகசியமாய் எட்டிப் பார்த்தது, தொடக்கத்தில் இருந்த தயக்கம் சட்டென்று விலக, வேட்கையும் விரகமும் ஒருசேர இணைந்து என்னை முன்னிருத்திச் சென்றது. தேகச் சூட்டில் எனை மறந்து இன்பத்தில் இலயித்திருந்தது நினைவில் உள்ளது.

இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.

நடந்து முடிந்ததை இன்றெண்ணிப் பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை. தீவினையின் முடிவில் நன்மை விளைவதில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். விலகிச் செல்ல துணிந்த பின் திரும்பத் திரும்ப எண்ணுவதில் பலனில்லை. என்னுள்ளிருக்கும் இந்தக் குற்றவுணர்வு என்னுள்ளே மடிந்து அழியட்டும் !!




(வழக்கம் போல கற்பனை கலந்து எழுதியது. தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்).

இதுவும் கடந்து செல்லும்


ஆம், நாம் பேசுவதை நிறுத்தி இன்றுடன் மூன்று நாட்களாகிறது. மனதிலிருப்பதை உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீ அன்று அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை, அதனால் உண்டான ஏமாற்றத்தை விட வலியே அதிகம். 

அன்று நடந்தது உனக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. கடந்து சென்ற இந்த நாட்களில் ஓரிரண்டு வருடங்கள் உருண்டோடிச் சென்றதாக உணர்கிறேன். எனது பலவீனத்தைத் தெரிந்திருந்தும் அதை நீ சொல்லியது மன்னிக்க முடியாததாகத் தோன்றுகிறது. இதை கடந்து செல்ல நினைக்கும் போதெல்லாம் பலவீனத்தை உணர்கிறேன். தவறான ஒன்று சரியாக வாய்ப்பேயில்லை என்பது மட்டும் உறுதியாகத் தோன்றுகிறது. 

உன்னுள் எழுந்த பாதிப்பை என்னால் முற்றிலும் உணர முடியவில்லை, உன்னை புரிந்துகொள்ள முற்படும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்வது வருத்தமாக உள்ளது. ஆனால் என்னைப் பற்றி நீ நிச்சயம் புரிந்து வைத்திருப்பாய் என்று எண்ணியிருந்தேன். உனது மௌனத்தைப் பழக்கப்படாத எனக்கு, நெருப்பில் நிற்பது போல் தோன்றுகிறது. என்னுள் எழும் இதுபோன்ற தருக்கங்கள் உன்னுள்ளும் நிகழ்ந்திருக்குமா ?

ஒருசில நேரங்களில் நம்முள் உருவாகும் கோபமே முடிவை நிர்ணயிக்கிறதுபின்னர் அந்த முடிவை நியாயப்படுத்த முயலும் போதெல்லாம் மனதில் பிடிவாதம் குடிகொள்கிறது. இறுதியில் இதுபோன்ற அவரச முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.

இதுவும் கடந்து செல்லும், காலம் தான் இதற்கான ஒரே மருந்து !




பெண்ணொருத்தி....



கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.

தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.

நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது. 

பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிழவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின!

இதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.

பாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.

வழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி
! அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது. 

தாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல
, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது. 

தீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.

ஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது. 

நீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது. 

நீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.   

குளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.

நீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.

நெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை! 

அடிவயிறு குளிராகவும்  அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது. 

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.

மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான  பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !

நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் !

நீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகி பஞ்சணையில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன. 

சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!