Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

மனதைத் தொட்ட... கவிதைகள்!

இணையதளத்தில் சமீபத்தில் நான் வாசித்த, என் மனதைத் தொட்ட கவிதைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். கவிதை எழுதியவர்களின் பெயர் மற்றும் விபரம் அறிய முடியவில்லை.

1. என்னைக் குத்திக் காட்டியது - என் தமிழ்
எத்தகைய யதார்த்தமான சிந்தனையைத் தூண்டும் வரிகள்! 
2. தமிழ் மொழி

 3. அம்மா

  
4. நம்பிக்கை


5. கமல்ஹாசன் கவிதைகள்


 இவைகளை இயற்றிய அனைத்துக் கவிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் எனக்கு இவ்வலைபூவை புதுப்பிக்க நேரம் கிடைத்திற்று. வாசகர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு/சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.


சமீபத்தில் இணையதளத்தில் உலாவும்போது 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒலிப்பேலை (mp3 audio file) கிடைத்தது.  சிறுவயதில் எனது அப்பா இப்புத்தகத்தை படித்தது இன்றும் நினைவில் உள்ளது. இதில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். 


சிறு வயதில் நான் எனது அம்மாவிட‌ம்  அடிக்கடி கேள்விகள் கேட்பது வழக்கம். அத்தகைய தருணங்களில் அதிக தடவை எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. உதாரணமாக எதற்காக குங்குமமும், திருநீரும் இடுகிறோம்? ஏன் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருவது வழக்கமாக உள்ளது? இதுபோன்ற எண்ணற்ற மதம் சார்ந்த கேள்விகளுக்கு, ஆராய்ந்து தனது பதிலை கவிஞர் இதில் குறிப்பிட்டுள்ளார். 

தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் பேசும் பொழுது அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்களையெல்லாம் பார்த்து, "பெரியோர்களே, தாய்மார்களே" என்று அழைத்தார். இதனைக் கேட்ட அங்கிருந்த இளம்பெண்கள் சிலர் சிரித்தார்கள். அதற்கு அவர் சொன்னார் - "நீங்கள் சிரிப்பது எனக்கு புரிகிறது. நீங்களோ இளம் பெண்கள், என்னடா நமக்கு இன்னும் திருமணம்கூட ஆகவில்லை, நம்மை இவன் தாய்மார்களே என்று அழைக்கிறானே என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

மேலை நாட்டிலே பெண் என்றாலே மனைவி அல்லது காதலி என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 'பெண்' என்ற பேரைக் கேட்டாலே தாய் என்கிற உணர்வுதான் எங்களுக்கு வரும். "தாய்! தாயே" என்று அழைப்பது எங்கள் லட்சியக் கனவாகும். பதினெட்டு வயது இளம்பெண்ணைப் பார்த்து 80 வ்யது கிளவன் பிச்சைகேட்கும் போதும்கூட ஏன்,  7 வயது சிறுமியைப் பார்த்து பிச்சை கேட்கும் போதும்கூட "தாயே பிச்சை போடு" என்று தான் கேட்கிறானே தவிர "சிறுமியே பிச்சை போடு அல்லது குமரியே பிச்சை போடு" என்று கேட்பதில்லை. 

எங்களுடைய குடும்பத்தின் லட்சியம், மூலம் 'தாய்'. எவள் இல்லையென்றால் இந்த பூமியிலே நான் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் நான் மீண்டும் அடைய முடியாதோ அவளே என்னுடைய வாழ்க்கையின் தத்துவங்களை துவக்கி வைக்கின்றாள்.

என்னுடைய தாயை நான் வணங்குகின்றேன். எனக்கு வாழ்க்கைக்குத் துணையாக ஒரு மனைவி வந்திருந்திருப்பாலானால் அவளும் அவளை வணங்கியாக வேண்டும். எனக்கு அவள் தருகிற இன்பங்களுக்காக என் தாயின் மீது ஏறி நின்று என் தாயாரை அவள் விலை பேச முடியாது. என்னுடைய தாய் என்பவள் தான் என் குடும்பத்தின் ராணி, அந்த ராணிக்குத் தோழிதான் என் மனைவியே தவிர அந்த மனைவி என்பவள் ராணி என்கின்ற அந்தஸ்த்தைப் பெற முடியாது.

அவளுக்கு வருகின்ற மருமக‌ளுக்கு வேண்டுமானால் அவள் ராணியாக இருக்கலாமே தவிர, என் தாய்க்கு அவள் தோழியாகத்தான் அடங்கி இருக்க முடியும். என் தாயை நான் வணங்கும்போது அவளும் வணங்கியாக வேண்டும். அப்படி அவள் வணங்க விரும்பவில்லையென்றால், என் மனைவியாக அவளை நான் அங்கீகரிக்க மாட்டேன். இதுதான் மேலை நாட்டிற்கும் இந்திய‌ நாகரிகத்துக்கும் உள்ள வித்தியாசம்.  இந்துக்களுடைய நாகரிகத்தில் தாய் என்கிற ஸ்தானத்திலிருந்தே சகலமும் ஆரம்பமாகின்றன" என்று சுவாமி விவேகானந்தர் அங்கே கூறினார்.

தாய் நம்முடைய பிறப்பிற்கு மூலமும் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்த உண்மை எது? "தாய்", அவள் மட்டுமே. இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பதை மட்டுமே நாம் அறிவோம்.  தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம். தகப்பன் கொண்டுபோய் உட்கார வைத்து "அரி நமத்து சிந்தம்" (pl check)  என்று எழுதச் சொல்லும் போதுதான் நாம் குருவை அறிவோம். 'அன்பே கடவுள், அறிவே தெய்வம்' என்று சொல்லிக் கொடுத்த பின்னாலே தான் நாம் தெய்வத்தை அறிவோம். அதனாலே தான் சுருக்கமாக நான்கு சொற்களை வைத்து 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று சொன்னார்கள்.

இந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாகத் தெரிந்த ஒரே உண்மை - மாதா, சந்தேகத்திற்கு இடமாக இருப்பது தெய்வம். சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்திற்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும்.  இவர்கள் இருவர் பற்றியும் சந்தேகம் எழலாம், இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தெய்வம் முழுக்க சந்தேகத்திற்கு உரியது, ஆனால் அடையும் போது அது முழுக்க உண்மையானது . "மாதா" சந்தேகத்திற்கே இடமில்லாதது. அவளிடமிருந்தே நம்முடைய‌ ஜனனம் ஆரம்பமாகிறது. 

ஜனனம் ஆரம்பமாகும் போது இந்த தாயினுடைய வயிற்றில் நாம் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வரம் வாங்கிப் பிறப்பதில்லை. அந்த இருவருடைய சந்தோஷத்தின் பலனாக ஆண்டவன் நம்மை அனுப்பி வைக்கிறான்.  அதனாலே தான் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என்று அழைக்கிறார்கள் இந்துக்கள்.ஆண்டவன் கொடுத்ததா! பிறகு தாய் தந்தையர் நிலை என்ன என்று கேள்வி கேட்கின்றவ‌ர்கள் இதை அறிய வேண்டும். தாய் தந்தையினுடைய‌ விருப்பத்தின் படி ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறக்க‌வில்லை. ஆண்டவனுடைய‌ விருப்பத்தின் படியே நாம் பிறக்கிறோம். அதற்கு இரண்டு கருவிகள் தான் தாயும் தந்தையுமாவர்.

ஜனனம் நமக்கு சர்வ நிச்சயமாக கிடைத்துவிடுகிறது. எந்த ஒரு குழந்தை பிறப்பதானாலும் கூட பத்தாவது மாதம் அந்த குழந்தை பிறக்கும் என்று ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. பெரிய பெண்ணாக வளருகிற‌ ஒரு பெண் 16 வயதிலேயும் வரலாம் அல்லது 18 வயதிலேயும் வரலாம், ஆனால் குழந்தை என்பது 10 மாதங்களிலே தான் பிறக்கும் என்கின்ற ஒன்றுதான் உலகத்தில் உண்மை. 

அதன் பின்னால் மரணம் என்பது இன்ன தேதியில் தான் வரும் என்று யாருக்கும் நிச்சயமான டைரி கிடையாது. 

(தொடரும்)


தாயின் காலடியே சொர்க்கம்!

22.04.05ல் ஆனந்த விகடனில் வெளியான அம்மா பற்றிய ஒரு கட்டுரை...

உலகத்தின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொ
ல்...அம்மாவைக் குறிக்கும் சொல்!


பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்தது. தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் இல்லை!

கடவுளின் படைப்பில் தன்ன
த்தின் நிழல்கூடப் படாதது, தாயின் படைப்பு ஒன்றுதான். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், சமீபத்தில் தான் பெற்ற விழியற்ற இரு பிள்ளைகள் பார்வையைப் பெறுவதற்காகத் தன் விழிகளைத் தரும் நோக்கில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்செல்வியைச் சிந்தித்தால் போதும், இதயமுள்ள அனைவரையும் அழச் செய்த தமிழ்ச்செல்வியின் தற்கொலை ஒரு தவறான நடவடிக்கை...ஆனால், அதைச் தன்னலமற்றஒரு தாயால் மட்டுமே செய்ய முடியும்.

தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள் தமிழில் விளக்கினால் வரும். தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்து பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் உலவு விடுகிறாள். இந்த உண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது 'அம்மா'!

இந்தியாவில் ஓர் லட்சிய பெண் தாயே. அவள்தான் தன்னலமற்று துன்பங்களைச் சகித்துக்கொள்கிற எந்த பாவத்தையும் மன்னிக்கிற மனோபாவம் கொண்டவள்.

மேலை நாடுகளில் பெண் ஒருவனால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால் கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள்தன் முழுவாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பூ அரும்பாகி, மலராகி, கனியாய் கனிவது போல், பெண்களுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என் மூன்று நிலைகள் உண்டு. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும்.  மலையில் உள்ள கல்லை யாரும்  மதித்து வணங்குவதில்லை. அது சிற்பியின் கைப்பட்டு சிலையாகும்போது அதற்கு ஒரு மரியாதை பிறக்கிறது. அந்த சிலைக் கோவிலின் கருவறையில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. கன்னிப் பெண் ஒரு கல்லைப் போன்றவள். இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாக செதுக்கப்படுகிறாள். தாயாகும்போது குடும்பக்கோவிலில் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகிறாள்.

உலகத்தின் எந்த இடத்திலும் கெட்ட பிள்ளை உண்டு. ஆனாலும் எங்கேயும் கெட்ட தாய் இல்லை. இதற்கு நம் இதிகாசத்திலும் சான்று உண்டு. 

கெளரவர்களின் தாய் காந்தாரி. கணவன் காணமுடியாத உலகைத் தானும் காண்பதில்லை என்று கண்களை
ப் பட்டுத்துணியால் மூடி மறைத்துக் கொண்டவள். காலம் முழுவதும் கற்புத் தவம் புரிந்த அந்த தாயுள்ளம், பாண்டவர்களால் துரியோதனனுக்கு துன்பம் நேர்ந்துவிடுமோ என்று கலங்கித்தவித்தது. போர் மேகம் சூழ்ந்த போது அவள் துரியோதனனை அழைத்தாள். 'மகனே என் கற்புத் தவத்தை உன் உடலுக்கு கவசமாக்குகிறேன். குழந்தையாய் பூமியில் நீ பிறப்பெடுத்த போதிருந்த நிர்வாணகோலத்தில் என் முன் வந்து நில். துணியால் மூடிவைத்திருக்கும் என் விழி துறந்து உன் மேனி பார்க்கிறேன். என் பார்வை படும் இடமெல்லாம் உருக்கின் வலிமை பெறும்.  அதன் பின் உன்னை யாராலும் அழிக்க முடியாது!' என்றாள்.

தாயின் முன்னால் நிர்வாணமாக நிற்க நாணிய துரியோதனன் இடுப்பில் ஓர் ஆடையை அணிந்து வந்தான். கணவனின் கரம் பற்றிய காலம் தொட்டு  மூடிவைத்த விழிகளைப் பட்டுத் திரை விலக்கி, முதன்முதலாக மகனைப் பார்த்தால் காந்தாரி.  ஆடை மூடிய தொடைப் பகுதியில் அவள் பார்வை படாததால் அந்த இடம் மட்டும் பலவீனமுற்றது. அதை அறிந்து வைத்திருந்த கண்ணன் காட்டிய சமிஞ்சையின்படி, களத்தில் பீமன் துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து நிலத்தில் வீழ்த்தினான். ‌

தான் பெற்ற நூறு பிள்ளைகளும் அழிந்ததற்கு மூல காரணம் கண்ணனே என்று புரிந்துகொண்டாள் காந்தாரி.  'கண்ணா! நான் ஒரு பத்தினி என்பது உண்மையானால் இவ்வளவு அழிவுக்கும் அடித்தளமான நீ அழிந்து போவாய்.  இன்றிலிருந்து முப்பத்தாறு ஆண்டுகள் முடியும்போது உன் குலம் முழுவதும் அழியும். உறவுகளின்றி அநாதையாய் நீ மரணத்தைச் சந்திப்பாய். இது சத்தியம்!' என்று சபித்தாள். அவளுடைய சாபம் அப்படியே நிறைவேறியதாக பாரதம் கூறுகிறது. கெட்ட பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தாலும், பாசமில்லாத கெட்ட தாயை எங்கும் பார்க்க முடியாது. அவதார புருஷனையும் சபிக்கும் ஆற்றல் பெற்றது தாயின் பாசம்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. பற்றுகளிலிருந்தும் விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம். ஒரு துறவியை, அவரைப் பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால், தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும்.  ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால், அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழ வேண்டும். தந்தைகட்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

கேரளத்தில் உள்ள காலடியில் அவதரித்த ஆதிசங்கரர், எட்டு வயதில் நான்கு வேதங்களைக் கற்று முடித்து, பன்னிரண்டு வயதில் சாத்திரங்கள் அனைத்தையும் தேர்ந்து தெளிந்து, பதினாறு வயதில் பாஷ்யம் எழுதி, முப்பத்திரண்டு வயதில் அத்வைதியானார்.  அவர் துறவுக் கோலம் பூண்ட போது, தன் மட்டும் தனி மரமாக எப்படி வாழ்வது என்று தவித்தாள் அன்னை ஆர்யாம்பிகை. மரணத்தின் மடியில் மூச்சுத் திணறும் போது மகனுடைய மடியில் தலைசாய்க்கும் வரம் வேண்டினாள். 'தாயே! நான் எங்கிருந்தாலும் உன் மரணப் பொழுதில் வந்து மடி சுமப்பேன்' என்று சத்தியம் செய்தார் சங்கரர்.

காலம் அதன் போக்கில் வேகமாக ஓடியது. ஒருநாள் சிருங்கிரியில் சீடர்களுக்கு நடுவே அமர்ந்திருந்தபோது அவருடைய நெஞ்சில் தாயின் மரணப்படுக்கை நிழலாடியது. உடனே, காலடி நோக்கி விரைந்தார். மரண வாசலில் தடுமாறிக் கொண்டிருந்த தாயின் தலையை மடியில் சுமந்தார். ஆரியாவின் ஆன்மா அமைதியடைந்தது. ஊரும், உறவும் கூடியது. ஈன்ற அன்னைக்கு இறுதிக்கடன் முடிக்க சங்கரர் முடிவெடுத்தபோது 'துறவிக்கு ஏது உறவு?' என்று உரத்த குரலில் ஊர் கேட்டது. 'சந்நியாசம் வாங்கியவன் பிரேத சம்ஸ்காரம் செய்ய முடியாது' என்று அது தீர்ப்பு வாசித்தது. 'தர்மத்தை மீறினால் தள்ளி வைத்துவிடுவோம்' என்று சனாதனச் சமூகம் மிரட்டியது.

ஊரின் மிரட்டலுக்கும், உறவின் ஒப்பாரிக்கும் சங்கரர் வளைந்து கொடுக்கவில்லை. தன்னைப் பெற்ற தாயின் சடலத்தைத் தோளில் சுமந்தார். தனியனாய் கொல்லைப்புறம் நோக்கி நடந்தார். அன்னையின் சடலத்தை இறக்கி வைத்து, 'அக்கினித் தேவனே! சந்நியாச தர்மத்தைத் தாங்கி நிற்கும் நான் இதுவரை உனக்கு அவிர்ப்பாகம் அளிக்கவில்லை. இன்று என் தாயின் தேகத்தை உனக்கு ஆகுதியாய் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்' என்றார். அன்னை ஆர்யாவின் உடலை உடனே நெருப்பு சூழ்ந்தது. விருப்புவெறுப்புகளைக் கடந்து ஞானநிலை அடைந்த ஆதிசங்கரர், சுகதுக்கங்களுக்கு ஆட்பட்ட சாதாரண மனிதனைப் போல் தாயின் அன்பை நினைத்து நெஞ்சம் உருகி, ஐந்து பாடல்களில் தன் சோகம் முழுவதையும் இறக்கிவைத்தார்.  அந்த பாடல்கள் வடமொழியில் 'மாத்ருகா பஞ்சகம்' என்று அமரத்துவம் பெற்றுவிட்டன.

வாழ்க்கை உறவுகளை ஒரே நொடியில் உதறித் தள்ளிய பட்டினத்தாராலும் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. தெரு மண்ணில் உருண்டும், குப்பையில் புரண்டும், காடு மேடுகளில் கால் கடுக்கத் திரிந்தும் பட்டினத்தாரின் காலம் நடந்தபோது, ஒருநாள் அவரைப் பெற்றெடுத்த தாய் கண் மூடிய செய்தி வந்து சேர்ந்தது. மயானம் நோக்கி ஓடினார். சுற்றத்தார் அடுக்கியிருந்த சிதையைத் தள்ளிவிட்டுப் பச்சை வாழை மட்டையில் தாயின் சடலத்தைக் கிடத்தி ஞான நெருப்பால் எரித்தார்.  பாசத்தால் ஆற்றமாட்டாமல் அனைவரும் தேம்பித் தேம்பிஅழும்படி பத்துப் பாடல்கள் பாடினார்.  தாயின் தியாகத்தை விளக்கும் பட்டினத்தாரின் பத்துப் பாடல்களை விஞ்சி நிற்கும் படைப்பு உலகத்தின் எந்த மொழியிலும் இருக்க முடியாது.

கன்னிமேரிக்கு மகனாய்ப் பிறந்த கர்த்தர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, கண்மூடும் கடைசி நிமிடத்தில் தன் தாயை நினைத்தார். உடற் கூட்டிலிருந்து உயிர்ப் பறவை பறக்கும் அந்தக் கடைசி நொடியில் ஒவ்வொருவர் நெஞ்சிலும் தாயின் நினைவே நிழலாட வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே தன்னுடைய மரணப் பொழுதில் அவர் தாயை நினைத்தார்.

'தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது' என்று நபிகள் நவின்றார். 'ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களுள் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணித்தல்' என்கிறது திருக்குர்-ஆன்.

நிலத்துக்கடியில் நிறைந்து நீர் கிணற்றில் தெரிவதுபோல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் ம‌டிக்காம்பில் சுரப்பது போல், தெய்வம் ஒவ்வொருவனுக்கும் தாயில் தரிசனம் தருகிறது' என்பது நம் வைதீக மதத்தின் வாக்கு. ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேசுவரம் காளி கோயிலில் அம்பிகை தரிசனத்தில் ஆழ்ந்து கிடந்தாலும், பெற்ற தாயை இறுதிவரை பராமரிக்க மறக்கவில்லை. அவருடைய ஆன்மிகச் சீடர் விவேகானந்தர் வேதாந்த சிகரத்தில் நின்ற நிலையிலும், தாயின் விருப்பத்தை நிறைவேற்ற, தனக்குச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிடினும் கங்கையில் நீராடி, ஈர உடையுடன் காளி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்யத் தயங்கவில்லை.


'என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்' என்றார் ஆபிரகாம் லிங்கன். 'பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்' என்றான் நெப்போலியன். 'அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவளால்தான் என் இலக்கிய ரசனையும் வளர்ந்தது' என்று நன்றி செலுத்தினார் காந்தியை சிந்தனையில் மகாத்மாவாகச் செதுக்கிய ரஸ்கின்.

கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில்  கூட இறுதிவரை தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது.  இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர், தன் மார்பில் தாயின் படத்தை தழுவியபடி நாற்காலியில் சரிந்து கிடந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

'முள்ளில் படுக்கையிட்டுப் பெற்றோர் இமையை மூடவிடாத பிள்ளைக் குலங்கள்' பல்கிப் பெருகுவது பாரதப் பண்பாட்டுப் பெருமைக்கு உகந்ததன்று.  முதியோர் இல்லங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த மண்ணுக்குரிய நாகரிகத்தின் நல்ல அடையாளமில்லை. குடந்தையில் தாயைத் தவிக்கவிட்டு, காசியில் கோதானம் செய்பவனைக் கடவுள் கண் திறந்து பார்க்க மாட்டான்.  நன்றி மறந்து தாயையும், தந்தையையும் புறக்கணிப்பவன், நரகத்தை வாழும் உலகிலேயே நாள்தோறும் அனுபவிப்பான். பெற்றோர்க்குச் சோறு போடாதவன் வாழ்க்கையில் உயர்ந்ததாக வரலாறில்லை.


அரசியலும், சினிமாவும் நம்மைப் பாதித்தபோல் வேறு எதுவும் பாதித்ததில்லை.  ராஜரிஷியாய் வாழ்ந்த காமராஜர் தாய்க்கு மட்டும் மாதம்தோறும் அடிப்படைச் செலவுக்கு 120 ரூபாய் அனுப்பிவைத்தார்.  கலைஞர் கருணாநிதி நாத்திகம் பேசினாலும் தாயைத் தெய்வமாகத் தொழுதிடும் ஆத்திகர்.  எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அம்மா என்ற சொல்லின் ஆழம் கண்டவர்கள்.  இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர்ந்தவர்களே தவிர, வீழ்ந்தவர்களில்லை.  இந்த இரண்டு துறைகளாலும் எத்தனையோ வழிகளில் மோசமாகப் பாதிக்கப்பட்ட என் வாழ்கால இளைஞர்கள் தாயைப் போற்றுவதில் இவர்களைத் தாராளமாகப் பின்பற்றலாம்.

பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது.  தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றிப் பணம் சேர்க்கும் இளைஞர்கள் சிலர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், ஆதரவற்று நிற்கும் பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.  அப்படிப் புறக்கணிக்கப் பட்ட பெற்றோரின் கண்ணீரில் வரையப் பட்டதுதான் இந்தக் கவிதை...

மகனே...
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒருநாள்...
நீ ஈமெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்!


பாசத்தின் வேர்களினால் தான் பாரதத்தின் பண்பாட்டு மரம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டிவிடாதீர்கள். மறைந்த காஞ்சி மகாப் பெரியவர் சொல்கிறார்..."தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு எதுவுமில்லை. பிள்ளை தன்னுடைய அன்பைப் பிரதிபலிக்காவிடினும், தாய் அதைப் பொருட்படுத்தமாட்டாள்.  பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு! துஷ்டப் பிள்ளை உண்டு. துஷ்ட அம்மா கிடையவே கிடையாது.  பரிபூரணமான அன்பையும் தன்னலமற்ற உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம் மட்டுமே பார்க்க முடியும்."

'அம்மா என்று
அழைக்காத உயிர்
இல்லையே
அம்மாவை வணங்காமல்
உயர்வில்லையே'


என்னும் வாலியின் வைர வரிகள் எப்போதும் வேத மந்திரமாக நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

அம்மா


நான் க‌ண் திறந்து பார்த்த முதல் பெண் என் அம்மா
நான் கண் திறக்கக் காரணமும் அவளே !"

"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம், பெற்ற தாயின்றி வேறொன்று ஏது"
உண்மை, எனது பார்வையில் ‍அம்மாவை வணங்காது உயர்வில்லை!


                                                  என் அம்மா

என்பிறப்பில் மறுபிறவி எடுத்தாள்
அவள் செந்நீரை சொட்டச் சுவைத்தேன் - அன்றும் உணரவில்லை ‍
நிலாச்சோறுடன் அவள் விரல்‍சோற்றையும் சுவைத்தேன் - அன்றும் உணரவில்லை
மழலைநடை பழக்கிய அவள் பாதம் நோகச்செய்தேன் - அன்றும் உணரவில்லை

நித்திரையில் நிழலாக நின்றாள் - அன்றும் உணரவில்லை
கல்லூரி கலாட்டாவில் அவள் கவலையை மறந்தேன்‍ - அன்றும் உணரவில்லை
திருமணத்திற்குப் பின், தொலைவில் நின்று தொலைபேசியில் சுகம் விசாரித்தேன் - அன்றும்உணரவில்லை
உணர்ந்த தருணம், அருகில் நின்று அம்மா எனஅழ - அடுத்த விடுமுறையை எதிர்நோக்கினேன்!

உன்னிடம் கேட்கும் வரம் ஒன்றே -‍ மறுபிறவியிலும் உன் மகனாகப் பிறக்கின்ற வரம் கொடம்மா, என் கண்ணீரால் உன் பாதம் கழுவ!!!