பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)


மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

பாடலுக்குச் செல்லும் முன் அப்பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது. 

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்பற்றிக் குறிப்பிடுவது

காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.



குறுந்தொகைப் பாடல்  எண் - 27

ஆசிரியர் - வெள்ளிவீதியார்

திணை - பாலைத்திணை

தலைவியின் கூற்று பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூகிறாள்.

‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமக் கவினே’’

கலம்பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன்நல்ல பசு
தீம் பால்சுவையான பால், உக்காங்குசிந்துதல்/விழுதல்
என்னைக்கும்என் ``க்கும்காதலன்
பசலைமேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது
உணீ இயர்தன்னை உட்கொள்ளும்; திதலைதேமல்
அல்குல்இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)
மாமைமாந்தளிர் நிறம்; கவின்அழகு 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.

ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.


காமன் பண்டிகை

இணைய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!!

காமன் பண்டிகை என்னும் தலைப்பைப் பார்த்ததும் வாசகர்கள் மத்தியில் சந்தேகம் எழுமென்று நினைக்கிறேன்! தீபாவளி தினத்தன்று அப்பண்டிகையைப் பற்றிக் கூறாமல், வேறு ஏதோவொரு (அந்த மாதிரிப்) பண்டிகையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறானே என்று எண்ண வேண்டாம். காமன் பண்டிகைக்கும் இன்றைய இளசுகள் கொண்டாடும் காதலர் தினத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை!!!!

காமன் பண்டிகை என்பது தமிழர் மரபில் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வரும் பண்டிகைகளுள் ஒன்று. இன்றும் தென் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இப்பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  பண்டிகையின் நிறைவின் போது தெருக்கூத்தும் நடத்தப்படும். இத்தகு காமன் விழாவைப் பற்றி நம் சங்கப் பாடல்கள் பலவற்றிலும் குறிப்புகளைக் காணமுடியும்.

காமன் விழா/பண்டிகையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் ’காமன்’ அதாவது ’மன்மதனைப்’ பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு மன்மதனென்று நான் குறிப்பிட்டது பீப்பாடல் புகழ் நடிகர் அன்று; தேவர்களுள் ஒருவரான காமதேவன் ஆவார். இன்னும் சரியாகச் சொன்னால் ரதியின் கணவர்; திரைப்படங்களில் தலைவன் அல்லது தலைவி மீது காம பாணமெய்து, அவர்களிருவருக்கும் இடையில் காதல் மலரச் செய்வாரே அவர்தான் ’காமன்’.

தேவர்களுள் அழகில் மிகுந்தவன், காம தெய்வன், கொஞ்சுங்கிளி வாகனமும், மகரக் கொடியுடையோன் (1), கரும்பை வில்லாக்கி அதில் ரிங்காரமிடும் வண்டுகளை நாணாக்கி  ஐந்து மலரால் (2) செய்த அம்பினை எய்தும் வடிவுடையோனே மன்மதனாவான். மன்மதனுக்குக் கோயில் கட்டி வணங்கியிருப்பதும் தமிழர் வழக்கிலிருந்துள்ளது.


மன்மதனுக்கென்று பேராயுதங்கள் எதுவுமன்று, ஐம்மலராலான மெல்லிய அம்புதான் அவன் ஆயுதம், அவ்வாயுதத்தால் வீழ்ந்தோர் தப்பியதில்லை!

சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு பார்வதிதேவியால் அனுப்பப்பட்ட மன்மதன் தன்னிடமிருந்த காமக்கணையை அவரை நோக்கித் தொடுப்பார். தனது தவத்தைக் கலைத்ததால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார். இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரண்டு, தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள். கோபம் தணிந்த சிவன் ரதியின் நிலையைப் புரிந்து அவள் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். பின்னர் மன்மதன் உயிர்த்தெழுந்து சிவபெருமானை வழிபடுதலே காமன் பண்டிகையாகும். 


      (1)   மகரக்கொடி – மீன் கொடி
    (2) ஐந்து மலர்கள் - தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம் (அல்லி??).

``குறிஞ்சி மலர்’’ நாவல் – அமரர் நா. பார்த்தசாரதி


சென்ற வருட விடுமுறையில் தாயகத்திற்குச் சென்றிருந்த பொழுது வீட்டிலிருந்த குறிஞ்சி மலர் நாவலை கையோடு எடுத்து வந்தேன்.  அப்பா என்னிடம் இந்நாவலை வாசிக்கும்படி பலமுறைக் கேட்டிருந்தும், நான் அதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று தட்டிக்கழித்து வந்தேன்.
இப்படி எடுப்பாரற்று பல நாட்களாக என் அறையில் மறைந்திருந்த இந்நாவலை சென்ற வாரம் வெளியே எடுத்துப்பார்த்தேன்; முன் அட்டையில் தமிழழகு கொஞ்சும் ஒரு பெண்ணின் படமும், எரிதழல் கண்களும் கூரிய சிந்தனையும் உடைய ஒரு ஆணின் படத்தையும் பார்த்தபொழுது இக்கதை இவர்களிவருக்கும் இடையில் உருவாகும் காதல் பற்றிய கதையாக இருக்குமென்று நினைத்தது எவ்வளவு தவறு என்பதை பின்னர் அறிந்தேன்.

மறைந்த எழுத்தாளர், சாகித்திய அகாதமி விருது பெற்ற அமரர் நா. பார்த்தசாரதி அவர்களின் கற்பனையில் உருவான கருத்தாழமிக்க இந்நாவல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்ததாகக் கேள்வியுற்றேன். 


இக்கதையில் வரும் சில முக்கியக் கதாபாத்திரங்கள்: பூரணி, அரவிந்தன், பேராசிரியர் அழகிய சிற்றம்பலம், முருகானந்தம், மங்களேஸ்வரி அம்மாள், வசந்தா, மீனாட்சிசுந்தரம் பிள்ளை,  பர்மாக்காரர், திருநாவுக்கரசு, செல்லம் மற்றும் மங்கையர்க்கரசி.

கதையின் நாயகி பூரணி, தமிழ்ப் பேராசிரியரான தன் தந்தையின் மடியில் தமிழ்ப் பயின்று,  உயரிய அறநெறிக் கொள்கையுடன், பாரதி ஏட்டில் ஏட்டிழெழுதிய நல்லொக்கத்துடன் வாழும் ஒரு புதுமைப்பெண்.

கதையின் நாயகன் அரவிந்தன், சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அவலங்கள், அநியாயங்கள் அவற்றால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கப் போராடும் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள இலட்சிய இளைஞன்.

அக்காலத்தில் இந்நாவலைப் படித்து அதன் ருசியில் இலயிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்று பெயர் சூட்டியதாகக் கேள்வியுற்று வியப்படைந்தேன்.

இந்நாவலை வாசிக்கும்போது நான் ரசித்து வியந்த ஒரு முக்கிய விடயம், கதையின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்தில் அமைந்திருக்கும் சங்கப்பாடல்களும், ஆசிரியரின் கவிதைகளுமாகும். இந்தத் தொடக்கப் பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் அப்பகுதியின் கருவை ஏங்கி நிற்பதாகத் தோன்றியது. 


உதாரணத்திற்கு தந்தையின் மறைவை எண்ணிச் சோர்ந்திருக்கும் பூரணியின் உள்ளத்தில் தோன்றும் ஒலியொன்று, அவள் தினம் சந்திக்கும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்பதை உரைக்கும் பாடல்;

"டுகின்றனன் கதிரவன் அவன்பின்
டுகின்றன ஒவ்வொரு நாளாய்
வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"
-நற்றிணை

"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வேமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையா இங்ஙேன வந்து மூண்டதுவே!"

அரவிந்தன் தான் பூரணியை எதேட்சையாகக் கண்ட நினைவை தன் நோட்டு புத்தகத்தில் கவிதையாக வடித்திருந்தது;

"தரளம் மரைந்த ஒளி
தவழக் குடைந்து - ரு
பவளம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெறியைக் கடைந்து – ரு
செவியில் திரிந்த குழல்
முதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்"

``பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்தடி ருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்’’
-- கம்பன்

தந்தையின் மறைவிற்குப் பின் தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் முதலாளியின் இறப்பை நினைத்து மனம் வாடி துன்புரும் அரவிந்தனின் மனக் கண்ணாடியை எடுத்துரைக்கும் பாடல்;

ஊரெல்லாம் கூடி லிக்க அழுதிட்டுப் பேரினை
நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையல் காட்டிரைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள்.
-- திருமூலர்

இறுதியில் பூரணி தன் காதலனைப் பிரிந்து துயருரும் நிலையைக் கூறும் பாடல்`

"பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!"

இப்படி கதை முழுவதும் சங்கப்பாக்களும், பாரதியார் மற்றும் திருவள்ளுவரின் வரிகளும் வந்து வந்து வாசிப்பவர்களுக்கு தமிழ் விருந்தளித்துச் செல்கிறது.
 
கதையின் கரு நம்மில் பலருமறிந்த ஒன்றே. அதாவது கல்யாண வயதில் தன் தந்தையை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெண், தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்/இன்னல்கள், அவள் இச்சமூகத்தால் பார்க்கப்படும் விதம், தான் வாழும் சமூகத்தின் மரபு திரியாமல், தந்தைக் கற்றுக் கொடுத்த தமிழாலும், அவரின் உயரிய அறநெறிக் கொள்கைகளைப் பார்த்து வளர்ந்ததால் தவறேதும் செய்யாமல், சமூகத்தை துணிச்சலாக எதிர்கொள்வதும், நிதிப்பற்றாக்குறைகளைச் சமாளித்து, தாய் தந்தையிழந்த தன் உடன்பிறப்புக்களை வழிநடத்திச் செல்லும் தாயின் உள்ளம் படைத்த, அப்பாவின் பெயருக்குக் களங்கமேற்படாமல் அவரின் பெருமையை ஏந்திச் செல்லும் ஒரு புரட்சிப் பெண்ணின் கதையாகும். 

அப்பெண் தான் ஏதேட்சையாக சந்திக்கும் ஒரு இளைஞனை முதலில் தவறாகப் புரிந்து கொள்வதும், அதுவே பின்னாளில் தவறெனப் புரிந்து அவனிடம் மன்னிப்புக் கேட்பதும், அதன்பின் அவர்களிவருக்குமிடையே நட்பென்ற மலர்ப் பூத்து, அது பின்னாளில் நட்பையும் கடந்துக் காதலாக மலர்கிறது. இப்படி அவர்களிவரும் தங்களைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை  எதிர்த்துக் கொதித்தெழுந்து, அத்தவறுகளை களைக்க முற்படுவதும், அதனால் அவர்களடையும் துயரங்களை எதிர்த்து வெற்றி கொள்ளுவதும் கதையின் சுருக்கமாகும்.

ஆசிரியர் இக்கதை முழுவதும் பல நல்ல கருத்துக்களையும், சமூகத்தில் புரைகளாக நிற்கும் தவறான செல்வந்தர்களின் செயல்பாட்டையும், அவர்கள் நல்ல மனிதர்களை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்பதை  இதில் உலாவரும் கதாபாத்திரங்களினூடே சரிவரப் புகுத்தி வெற்றி கண்டுள்ளார். ஆசிரியரின் தமிழ் வளமை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

ஆனாலும் இனிவரும் தலைமுறையினர் இந்நாவலை விரும்பிப் படிப்பார்களா என்பதில் சிறிது ஐயமெழுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கதையில் சில இடங்களில் சுவாரசியம் மெல்ல மெல்லக் குறைந்து, அடுத்து வரும் நிகழ்வுகள் வாசகர்களுக்கு எளிதில் யூகிக்கக் கூடியவையாக அமைந்துள்ளது. மேலும் கதை முழுவதும் சோக நெடி அதிகமுள்ளதாகத் தோன்றுவது முடிவில் சலிப்பூட்டுகிறது. 

ஆனால் மேற்குறிப்பிட்ட கருத்துக்களனைத்தையும் நாவல் வந்த அந்தக்கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏன் இந்நாவல் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வெற்றி பெற்றதென்பது புரிகிறது.ந்த நாவலின் காட்சி வடிவமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது. அதில் அரவிந்தனாக நடித்தவர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். அன்றைய நாட்களில் இக்காட்சித்தொடரால் பலரும் ஈர்க்கப்பட்டிருந்தது இந்நாவலின் மிகப்பெறிய வெற்றியாகக் கருதுகிறேன்.

கதையில் வரும் பூரணி, அரவிந்தன் போன்று அறநெறியில் வாழும் மனிதர்கள் இன்று நம்முடன் இருக்கிறார்களா என்றால் வெற்றிடமே நிரம்பும். இத்தகு கொள்கைநெறியுடன் வாழ்பவர்களை இனி நேரில் காண்பதென்பதரிது.